புதன், 29 நவம்பர், 2017

அன்பு நடமாடும் கலைக்கூடம்...

கந்து வட்டிக்கொடுமை சாதாரண மக்கள் முதல் பெரிய மனிதர்களையும் விட்டுவைக்கவில்லை..

 சாதாரண மனிதர்களுக்கு அவசர தேவைகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்காது ஆயிரம் நிபந்தனைகள் போடுவார்கள்.  அதனால் அவர்களால் வங்கிகளை அணுக முடிவதில்லை. சினிமா போன்ற கானல் நீர் துறைக்கும் வங்கிகள் கடன் கொடுப்பதில்லை ..

 அதே சமயம் சினிமா பிரபலங்கள் கமல்கள்  முதல் கண்களில் ஆயிரம் கனவுகளுடன் வரும் கடைக்கோடி படைப்பாளியும் தம்மை  நிலை நாட்டிக்கொள்ள இப்படித்தான் கந்தில் மாட்டி தவிக்கிறார்கள்..  கமல் போன்றோர் தன் மார்க்கெட மதிப்பால்  தப்பிவிடுகிறார்... ஆனால் சாதாரணமாக எங்கோ தமிழகத்தின் மூலையிலிருந்து எந்த பின்புலமின்றி கனவுகளுடன் வரும் இளைஞனின் நிலை அவன் கடன் வாங்காமல் எதையும் செய்ய முடியாது.... புதியவனான அவனை நம்பி பெரிய தயாரிப்பாளரும் முதலீடு செய்ய மாட்டார்... பிறகு அவன் கடன் வலையில் சிக்கிக் கொள்கிறான்...

  இந்த இடத்தில் நாம் மெகா கதாநாயகர்கள் வாங்கும் சம்பளத்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது ஒரு படம் தயாரிக்க 2 கோடி என்றால் இவர்கள் சம்பளம் 50 கோடி என்றாகும் போது ஒரு படம் எடுப்பதே கேலிக்கூத்தாகி விடுகிறது (இதில் 50 கோடியை தாண்டி சம்பளம் வாங்குபவரை பற்றி கேட்கவே வேண்டாம்  ) இறுதியில் இவர்கள் நாயகர்களாக மக்கள் மனதில் வலம் வர இவரை வைத்து சூதாடிய அல்லது தயாரித்தவர்கள் கதி அதோ கதியாகிறது ...

 ஆக  இது ஒரு விஷச் சக்கரம் போல ...

இப்போது நாம் யாரை மட்டும் குறை சொல்வது அன்பை மட்டுமா  ..

வியாழன், 23 நவம்பர், 2017

கடவுள் உண்டா அல்லது இல்லையா…?

எனது 30 வயதில் நாத்திகனாகத்தான் இருந்தேன்..  இறை என்பதே ஒரு ஏமாற்று வேலை என்றுதான் நினைத்திருந்தேன்..  20 வருடங்களுக்குப் பின்னர் அப்படி ஒரேயடியாக சொல்ல முடியுமா என்று  தோன்றுகிறது.. சில விஷயங்களுக்கு பதில் இல்லை என்பதுதான் அதற்கு காரணம் 

எங்கோ படித்த ஞாபகம்.. கடவுள் உண்டு என்பதற்கும் ஆதாரம் இல்லை - இல்லை என்பதற்கும் ஆதாரம் இல்லை என்று…

அது ஒரு புறம் இருக்கட்டும்…. ஆனால் இத்தனை பெரிய விஷயத்தை சாதாரணமாக ஒரு சீன படைப்பாளி ஆங்கில திரைப்படத்தில் - நமது ஆன்மாவை தொடும் அதிசயத்தை  ஒரு காட்சியில் காட்டுகிறார் 

… உங்கள் அனைவருக்கும் தெரிந்த திரைப்படம்தான்…  பலர் இதற்கு விமர்சனம் எழுதி அலுத்திருக்கலாம் 

 .....“THE LIFE OF PI” என்கிற ஆங்கிலப் படம்…   MOVIES NOW, HBO, STAR MOVIES போன்ற சாட்டிலைட் டிவியில் எத்தனை முறைகள் போட்டாலும் பார்க்கத் தோன்றுகிறது......மக்களால் மீண்டும் மீண்டும் விரும்பப்படுகிறது ... ஒரு சீனர் இயக்கிய  ஆங்கிலப் படம்..    .நடித்தவர்கள் பெரும்பான்மை இந்திய நடிகர்கள் என்பது அதன் தனிச் சிறப்பில் ஒன்று .. தொடங்குவதும் நமது தமிழ்க்  கலாச்சாரத்திலிருந்து என்பது எத்தனை அழகு.... அந்த படமும் அதன் கதையும் அனைவர்க்கும் தெரிந்தது தான் ..    விபத்து நடந்த கப்பலிருந்து தப்பி ஒரு படகில் , பயங்கரமான வங்கப்புலியுடன் 227 நாட்கள் பசிபிக் கடலில் பயணித்து கரையடைவதுதான் கதை .. மருத்துவ மனையில் படுத்திருக்கும் PISCINE PATEL என்கிற பையை (கதாநாயகன்) வந்து பார்க்கும் அந்த ஜப்பானிய இன்சூரன்ஸ்காரர்களை போல் அந்த கதையை நம்மாலும் நம்ப முடியவில்லை ..  "நம்பும்படியாக சொல்லுங்கள்..."' என்று அந்த ஜப்பானிய இன்சூரன்ஸ்காரர்கள் கேட்கிறார்கள் .. அவர்களுக்காக மிருகங்களுக்கு பதிலாக மனிதர்கள் என்று அதே கதையை மாற்றி  சொல்கிறான் பை .. 

இறுதி காட்சியில் அவனுடைய   கதையை கேட்க வந்த அந்த நாத்திகரான வெள்ளைக்கார எழுத்தாளரிடம் பை சொல்கிறான் "நான் உங்களிடம் இரண்டு கதை சொன்னேன் அதில் எதை தேர்வு செய்கிறீர்கள்...'" என்கிறான் ..அவர் அந்த வங்கப்புலியுடன் படகில் 227 நாட்கள் பயணித்த இந்த "பை'" யின் கதை என்கிறார்... அதற்கு "பை'" அப்போது "அந்த கதை கடவுளுக்கு நெருக்கமானது..." என்கிறான்..

 அந்த நாத்திக எழுத்தாளர் சற்று கண்ணை மூடி யோசிக்கிறார் .  அந்தக் காட்சி ...  அந்தக் காட்சி ....LOVELY  என்று கத்த தோன்றுகிறது ....அந்த சில நிமிடம் என்  உடலில் பல வோல்ட் மின்சாரம் பாய்வதாக உணர்தேன்... கடவுள் உண்டோ இல்லையோ ஆனால் நம்மால் நம்ம முடியாத விஷயங்கள் நடக்கும் பொது தெய்வாதீனம் என்றுதான் கடக்க நேரிடுகிறது  ..

அந்த உணர்வை ஒரு படத்தில் ஒரு காட்சியில் உணர்த்திய  அந்த ஆங் லீ என்கிற சீன  இயக்குனரை வணங்கதோன்றுகிறது..

திங்கள், 13 நவம்பர், 2017

அறத்தாறு இதுவென வேண்டா ...அறம் திரைப்படம் ...

வழக்கமான முட்டாள்தனமான சண்டைக்காட்சிகள் இல்லை...

 பைசா பிரயோஜனமில்லா பன்ச் டயலாக் இல்லை.....

 லூசுத்தனமான காதல் காட்சிகள் இல்லை ....


Image result for ARAM STILLS




இருந்தாலும் இந்தனை இல்லைகளை  தாண்டி ஒரு படம் உருவாக்கமுடியும்.. அதுவும் விறுவிறுப்பு குறையாமல் செய்திப்படமாக ஆகாமல் அதில் சமூக பார்வை புகுத்த முடியும் என்பதை நிரூபித்த கோபி நயினாருக்கு வாழ்த்துக்கள் ...

வெல்லட்டும் உமது பணி ...

செவ்வாய், 31 அக்டோபர், 2017

மேலாண்மை பொன்னுச்சாமி...

மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் மறைவு அதிர்ச்சி..
 அன்னாரை நான் சந்தித்தது இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவில்..

Image result for MELANMAI PONNUSAMY PICTURE

 அவர் சிறுகதை முதல் பரிசு பெற்றது.   அந்த தொகுப்பில் எனது சிறுகதை ஒன்று இடம் பெற்றது..  அப்போது அவரை சந்திக்கும் வாய்ப்பு..   முதல் சந்திப்புக்கு பிறகு என் பெயரை நினைவு கொண்டு அடிக்கடி இவர்தான் பத்ரி என்று பிறரிடம் அறிமுகம் செய்தார் . இத்தனை பெரிய எழுத்தாளர் DOWN TO EARTH PERSONALITY ஆக இருப்பது  கண்டு வியந்தேன். 

 அவர் படைப்பின் பெரும் பகுதியை படித்திருக்கிறேன். அன்னார் மறைவு ஒரு நெருங்கிய உறவினர் மறைவைபோல் உணர்கிறேன் ..

 அன்னாருக்கு அஞ்சலி

செவ்வாய், 24 அக்டோபர், 2017

முதலில் இதை தடுப்போம் ...

கந்து வட்டிக்  கொடுமையை என்ன வென்று சொல்வது...?

எரிந்து போன அந்த குழந்தைகளை பார்க்கவே ஐயோவென்று இருக்கிறது.. 

ரத்தத்தை அட்டையை விட அதிகமாக உறிஞ்சும் இந்தக் கந்து வட்டியை அதை வசூலிக்கும் மனிதமே இல்லாத இரண்டு கால்  ஜந்துக்களை  மனிதர்கள் வகையிலே சேர்க்க கூடாது..

 இந்த நாயினும் இழிவானவர்கள் கட்சி பேதம் இல்லாது விஷச்செடி போல் பரவி இருக்கிறார்கள் ...

 அனைத்து சட்டங்களையும் தன்  வசம் வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள் ...

எத்தனை சட்டங்கள் போட்டாலும் அது இவர்களை ஒன்றும் செய்வதில்லை..

முதலில் மேலும் ஒரு ஏழை மரணிக்கும் முன் தடுக்கவேண்டியது இந்தக் கந்துகொடுமையைத்தான் ,,, 

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

தமிழும், திராவிடமும்....

இந்தத் தலைப்பே சுவாரசியமானது விவகாரமானது விவாதத்திற்குரியதுதான்.. இது முன்பிருந்த சமாச்சாரமானாலும் தற்போது அதிகம் விவாததிற்குள்ளாகியிருக்கிறது.. அதற்கு இணைய உலகம் ஒரு காரணமாக இருக்கலாம்.. 

திராவிடர்கள்தான் தமிழர்கள் என்று ஒரு புறம்.. அதெப்படி மலையாளியும் கன்னடனும் தெலுங்கனும் தமிழை ஏற்கவே மறுக்கிறான் அவனும் திராவிடன்தானே என்று மறு புறம். தமிழிலிருந்து தோன்றிய மொழிகள்தான் மற்ற மொழிகள் என்பதை பிற மாநிலத்தவன் ஏற்க மாட்டான் ஆகவே அவன் திராவிடத்தை ஏற்கவில்லை என்று ஒருவரும் அப்படி ஏற்கவில்லை என்றால் நாம் மட்டும் அதை ஏன் தலையில் ஏற்றிச் சுமக்க வேண்டும் என்று எதிர்வாதமும் மாறி மாறி சுழன்றடிக்கிறது..

எனக்குத் தெரிந்த வகையில் பார்க்கும் போது, திராவிடம் என்கிற சொல்லாடலே பழந்தமிழில் புழக்கத்தில் இல்லாத சொல்லாகத்தான் இருக்கிறது.. காரணம் திருக்குறளில் 1330 குறளிலும் திராவிடம் என்கிற சொல்லே இல்லை.  தொல்காப்பியம் ஆகட்டும் கம்பராமாயணம் சிலப்பதிகாரம் ஆகிய தமிழ்க் காவியங்களிலும் திராவிடம் என்கிற சொல்லாடலே இல்லை.  காரணம் அப்படி ஒரு குறியீடு இல்லை என்றே நாம் கொள்ளவேண்டும். ( ஒரு வேளை அதனால்தான் பெரியார் இவைகளை குப்பைகள் என்றே சொன்னார் போலும்).   சௌத் இண்டியன் லாங்வேஜ் அல்லது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்  என்பது ராபர்ட் கால்டுவெல் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலில்தான் அப்படி ஒரு சொல்லாடல் இருக்கிறது என்பதால் அதையே திராவிடக் கட்சிகள் எடுத்துக் கொண்டன என்கிறார் பெ மணியரசன் அவர்கள். 

ஆனால் ஆதிசங்கரர் எழுதிய சௌந்தர்யலஹரியின் ஒரு ஸ்லோகத்தில் (பாடல் 75) திராவிட சிசு என்று ஒரு சொல்லாடல் பார்க்க முடிகிறது.  ஆதிசங்கரர் வாழ்ந்த காலகட்டம் கிபி 4 அல்லது 7 நூற்றாண்டு.  ஆக அப்போது அந்தச் சொல்லாடல் இருக்கலாம்.. ஆனால் அதற்குப் பின்னர் அது வழக்கத்தில் வரவில்லை.  மேலும் திராவிட சிசு என்று ஆதிசங்கரர் தன்னை வர்ணித்தாரா இல்லை திருஞானசம்பந்தரை வர்ணித்தாரா என்பதே குழப்பமாக உள்ளது.. ஆனால் இருவரும் பிராமணர்கள்தான்..  ஏன் பிராமணர்கள் என்கிறேன் என்றால் திராவிடர்கள் பிராமணர்கள் இல்லை என்றே தற்போது அறியப்படுகிறது.. அதற்கு மாறாக ஆதிசங்கரர் குறிப்பிடுகிறாரே...

ஆனால் தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள்,  தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ தமிழர் கழகம் என்றோ தமது கட்சிகளுக்குப் பெயர் வைத்தால்  தமிழைத் தாய் மொழியாக கொண்ட பிராமணர்கள் உள்ளே வந்துவிடுவார்கள் என்கிற உயரிய  (?) நோக்கத்துடன் அதைத் தவிர்த்து பெயரிட்டதாக சொல்லப்படுகிறது.  சரி தற்போது சீமான் பாரதிராஜா போன்றோர் வேற்று மொழிகாரர்களை ஏற்க மாட்டேன் என்கிற போது திராவிடக் கட்சிகள் அதை எதிர்க்கின்றன.. (பாரதிராஜா ரஜினியை மட்டுமல்ல வைகோவைக் கூட தமிழர் தலைவர் என்று ஏற்க மாட்டேன் என்று ஒரு போடு போட்டார்).  இந்த விஷயங்கள் திராவிடக் கட்சிகளை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிறது.   காரணம் பெரியார் டிஎம் நாயர்  சர் பிடிதியாராயர் போன்றவர்களை திராவிட கட்சிகள் கைவிடமுடியாது அவர்கள்தான் ஜஸ்டிஸ் கட்சியின் தோற்றுவாயாக இருந்தவர்கள்..  அவர்கள் இவாளை ஒதுக்கினார்கள் அதுவே தற்போது வேறுவிதமாக தாக்கி இவர்களையே ஒதுக்கும் சூழல் வருகிறது.  ஆகவே அலறுகிறார்கள். விடுதலைசிறுத்தைகள் ரவிகுமார் ஒரு படி மேலே சென்று சென்று தற்போது ஆரியர்கள் என்பதே முட்டாள்தனமானது என்கிறார்.  காரணம் சென்ற நூற்றாண்டில் பேசியது தற்போதைய 2017 நடைமுறைக்கு  DNA TEST செய்து பார்த்தால் யாருக்கும்  பொருந்தவே பொருந்தாது என்கிறார்.   

ஆனால் காய்தல் உவத்தல் இன்றி பார்த்தால்....

தமிழர்களை, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்  (அந்த உணர்வுள்ளர்கள்) ஆட்சி செய்ய வேண்டும் என்பது ஒதுக்கப்பட வேண்டிய விஷயமன்று.  அது ஒரு ஜனநாயகக் கோரிக்கைதான்.  அது ஒரு தேசிய இன அடையாமாகவே பார்க்கலாம் ..  அது காந்திய வழியில் மட்டுமே அடைய வேண்டிய ஒன்றுதான்...

அப்படித்தான் நமக்கு ஒரு காமராசர் கிடைத்தார்.. 


ஞாயிறு, 8 அக்டோபர், 2017

சாருவின் வழியில்…

கமல ஹாசனை விட சாருஹாசன் தமிழகத்தை மிக நன்றாக கணித்து வைத்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.  அவரின் பேட்டி தந்தி டிவியில் ஒளிபரப்பினார்கள். அவர் கூறிய ஒவ்வொன்றும் முத்தான வார்த்தைகள் என்றால் மிகையில்லை.

 சாதி ரீதியாக பிரிந்து கிடக்கும்  ஒரு நாட்டில், அரசியல் வேட்பாளர்களும் அவ்வாறே தேர்வு செய்யப்படும் சூழலில், கமல் போன்ற சிறுபான்மை சாதியில் பிறந்தவர்கள் என்னதான் முற்போக்கு பேசியினாலும் ஓட்டுக்கள் விழ வாய்ப்பில்லை என்பது உண்மைதான்.

சாரு அவர்களின் பேட்டியில் பல விஷயங்கள் சுவாரிஸ்யமாகவும் சிந்தனைக்குரியதாகவும் இருந்தது. பெரியார்  திராவிட இயக்கம் கடந்த பல வருடங்களாக பிராமண எதிர்ப்பு பிரச்சாரம் வலுவாக செய்ததின் விளைவாக பிராமண எதிர்ப்பும் மறுபுறத்தில் சாதி ரீதியாக திரட்டல் வளர்ந்து கட்டித்தட்டி போய்விட்டது.  பெரியாரின் பகுத்தறிவைவிட பிராமண எதிர்ப்புக்கு அழுத்தம் அவர் காலத்திலேயே தரப்பட்டது. அவருக்கு பின் பகுத்தறிவு பின்னுக்கு தள்ளப்பட்டு முழுவதும் பிராமண எதிர்ப்பே பெரியாரின் வாரிசுகள் எடுத்துக்கொண்டார்கள். அது ஒரு வகையில் அரசியலுக்கு பயன் பட்டது.. இத்தனையாண்டு தமிழகம் அப்படிதான் மாறிப்போய் உள்ளது. அதில் பிராமண எதிர்ப்பு முற்போக்காகவும் சாதி ரீதியில் திரள்வது பிற்போக்காகவும் சொல்லப்பட்டாலும் இரண்டும் பிழையானது என்றே நான் கருதுகிறேன்.  

சாரு சொல்வது போல அதெப்படி எல்லா துறைகளிலும் பிராமணர்கள் மட்டுமே நிறைத்திருந்தார்கள் என்பதில் உண்மை இருக்க முடியும்? அவர்கள் மக்கள் தொகையில் வெறும் 3 சதம் இருக்கும் போது… எல்லா துறையும் அவர்கள் நிறைத்திருந்தார்கள் என்பது லாஜிக் இல்லாத வாதம். உண்மையில் ஜஸ்டிஸ் கட்சியினருக்கும் பிராமணர்களுக்கும் இடையே இருந்த போட்டி மனப்பான்மையே இந்த வாதம் வளர வழி வகுத்தது. இறுதியில் ஒரு பாதி உண்மையான இந்த வாதம் முழு உண்மையாக தோற்றம் அளித்தது. அதுவே மக்களிடம் எடுத்து செல்லப்பட்டு ஜஸ்டிஸ் கட்சியினரின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது.

ஏன் கேரளாவில் கர்நாடகத்தில் ஆந்திரத்தில் மகாராஷ்டிரத்தில் தலித்துகளோ பிற்படுத்தப்பட்ட மக்களோ இல்லையா…? அவர்களிடம் இந்த வாதம் ஏன் எடுபடவில்லை என்பது மிக முக்கிய கேள்வி. சாரு சொல்வதை போல தமிழகம் என்பது பெரும்பாலும் 60 சதம் பிற மொழிக்காரர்களும் 40 சதம் மட்டுமே  தமிழர்களாகவும் இருப்பதும் ஒரு காரணம். அவர்களை ஒன்றிணைக்க பிராமண எதிர்ப்பு பயன்பட்டது.

என்னதான் பகுத்தறிவு பிரச்சாரம் செய்தாலும், தமிழகத்தில் கடவுள் பக்தியோ சடங்கு சம்பிரதாயங்களோ குறையவே இல்லை. மாறாக அதிகமாகியே உள்ளது. மேலும் பல திராவிட பிரமுகர்களும் இவைகளை கடை பிடிப்பது இணைய தளத்தில் வந்து சிரிப்பாய் சிரிக்கிறது. இந்த சூழலில் பிராமணர்கள்தான் அனைத்துக்கும் காரணம் என்று அவர்கள் மீது அனைத்து பாவங்களை ஏற்றுவது சமூகத்தில் அவர்கள் சிறுபான்மையினர் என்பதுதான் இன்னும் தெளிவாய் சொன்னால் அவர்கள் ஓட்டு தீர்மானிக்கும் ஓட்டல்ல என்பதே.

சாரு சொல்வதை போல, ஒரு வகையில் இந்த தலைமுறை வரை இந்த வாதம் நீடிக்கும் என்பதே நடக்கும்ஆனால் யோசித்துப்பார்த்தால் இந்த விஷயங்களை பற்றி பேசுவது விவாதிப்பது எழுதுவது எல்லோரும் சிறுபான்மையினர்தான்.

 பெரும்பான்மை இதற்கு வெளியே நிற்கிறது. அந்தப் பெரும்பான்மை அவ்வப்போது பிரச்சனைக்கு தகுந்தவாறு எந்தப்பக்கம் சாய்கிறதோ அந்தப்பக்கம் காற்று வீசுகிறது..