செவ்வாய், 31 டிசம்பர், 2013

பொருளாதார மந்த நிலை என்கிற RECESSION

இது ஒரு பொருளாதார அலசல் கட்டுரை அல்ல.. ஆய்வுக் கட்டுரையுமல்ல.. ஆனால் இவற்றைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. சில நாட்களாக இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. சில தரவுகளுக்காக காத்திருந்தேன்.. முழுமையான தரவுகள் இல்லை என்றாலும் அங்கிங்கு அலைந்தும்  சில முக்கியமான மனிதர்களிடம் பேசித் திரட்டிய தகவல்தான்

வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஆங்கில அறிவு

நாம், நமது வாழ்க்கையில் ஆங்கிலத்தை ஏற்கிறோமோ இல்லையோ அது இன்றியமையாத தேவையாக இருக்கின்றதை நாம் திறந்த மனத்துடன் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.. இந்தி வேண்டாம் என்றோம்.  ஆனால் ஆங்கிலத்தை நம்மால் தவிர்க்க முடியவில்லை..

சனி, 21 டிசம்பர், 2013

ஜெயமோகன் சொல்வது சரிதானோ?

தூதரக அதிகாரி தேவ்யானி விவகாரம் பற்றிய பரபரப்பு காட்சி ஊடகங்கள் வலையுலகம் என்று பெரும் சுற்று சுற்றிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி நான் என்ன சொல்கிறேன் என்று சிலர் (சிலராவது) கேட்கிறார்கள். 

அய்யா... எனக்கு கருத்து சொல்லும் அளவிற்கு தகுதி இல்லாவிட்டாலும் சில நேரங்களில் சில கருத்துக்கள் தோன்றத்தான் செய்கின்றன.

வியாழன், 19 டிசம்பர், 2013

அன்னாவும் அறிஞர் அண்ணாவும்

இப்போது நடக்கும் கெஜ்ரிவால் அன்னா சண்டையைப் பார்த்தால் தி க வில் இருந்து  தி மு க வை ஆரம்பித்த அண்ணா நினைவுக்கு வருகிறார்....

ம்ம்..  வடக்கு மீண்டும் வாழ்கிறது.....

சனி, 7 டிசம்பர், 2013

27 ஆண்டுகள்






27 ஆண்டுகள் தனிமை சிறை அதுவும்  தனிப்பட்ட கோரிக்கைக்காக அல்ல நீயும் நானும் ஒன்று என்பதற்காக...   பச்சை படு கொலை செய்தாலே 14 ஆண்டுகளிள் வெளியெ வரும் அயோக்கியர்கள் மத்தியில் ( சிலருக்கு கேசே  கிடையாது)  
ஒரு தலைவன் நம் முன்னே நம் காலத்தில்  வாழ்ந்திருக்கிறான் என்பதை நம்ப முடியவில்லை

அன்னாருக்கு அஞ்சலி

வியாழன், 28 நவம்பர், 2013

ஜெகத்தின் குரு....

2004 வருடம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் ஊழியர் படுகொலை 
என்கிற செய்தி வந்ததை ஞாபகப் படுத்திப் பார்க்கிறேன்.  அடப் பாவிகளா.. கோவிலில் உள்ளேயே கொலையா என்று நண்பர்களுடன் பேசிக் கொண்டதை நினைத்துப் பார்க்கிறேன்.

வெள்ளி, 22 நவம்பர், 2013

ஏன் இப்படி...?

 ///நியதி.-  வளரும் வரை புரட்சியாளர்களாக திகழ்கிறவர்கள், வளர்ந்து விட்டால் நம்ப முடியாத எதிர்புரட்சிக்காரர்களாக மாறிவிடுகிறார்கள்///

புதன், 20 நவம்பர், 2013

1000 (அசாரே) குழப்பம்

குழப்புகிறார் அன்னா அசாரே...
முதலில் அன்னா அசாரே பிரகடனம் செய்தது லோக் பால் மசோதா வேண்டும் என்று.  அதற்காகத்தான் பாடுபடுகிறேன் என்றார்.. பின்னர் அனைத்து கட்சிகளும் ஃபிராடுகள் என்றார்.. அர்விந்த கெஜ்ரிவால் கட்சி ஆரம்பித்ததும அது தவறு என்றார்.

என் பெயரையும் சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு அர்விந்த் பெரும் பணம் 
திரட்டுகிறார் அதுதான் தவறு என்றார்.

காங்கிரஸ் பிஜேபி போலத்தான் அர்விந்தின் புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி என்றார். 

இன்றய  Times of India நாளேட்டில் (20/11/13) அர்விந்த் நல்ல மனிதர்.. ஆனால் அவர் ஆரம்பித்த கட்சி ஆம் ஆத்மியை நான் ஆதரிக்க மாட்டேன்.. வேண்டுமானாலும் கட்சியைக் கலைக்கட்டும்.. கலைத்துவிட்டு சுயேச்சையாக தேர்தலில் நிற்கட்டும்.. அப்போது அர்விந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன் என்கிறார்..
http://articles.timesofindia.indiatimes.com/2013-06-16/india/40006407_1_political-parties-anna-hazare-clean-image

ஓரே குழப்பமாக இருக்கிறது.. சுயேட்சையாக நின்றாலும் கட்சியாக நின்றாலும் அதே கெஜ்ரிவால்தானே..அரசிய்ல் கட்சியாக வந்தால் அயோக்கியர்களாகிவிடுவார்களாம்.......எனக்குப் புரியவில்லை..  யாராவது அன்னா என்னா சொல்ல வர்றார் என்பதைப் பற்றி விளக்குங்கள்..

பெர்னாட்ஷா-வாக மாறுவோம்...

சில தினங்களாகவே இணைய உலகில் பாரத் ரத்னா பற்றி சர்ச்சைகள்  தென்பட்டுக் கொண்டே இருக்கின்றன.  சச்சின் தான் இதில்(கூட) கதாநாயகர்.. ”எப்படியா போச்சு அந்த ஆளுக்கு பாரத் ரத்னா“ பலர் சண்டமாருதம் செய்கிறார்கள்..

செவ்வாய், 12 நவம்பர், 2013

கல்லில் நார் உரிக்கும் கலை

அன்பே சிவம் படத்தில் ஒரு வசனம் வரும்.. நாசர் அந்தப் படத்தில் ஒரு முதலாளியாக நடிப்பார்... அவர் ஒரு காட்சியில் இப்படிச் பேசுவார், ” இந்த அரசியல்வாதிங்க தொழிலாளர் பக்கம் சைட் எடுக்கற மாதிரி நடிப்பாங்க... ஆனா அவங்க நம்ம பக்கம்தான்.. பின்ன அன்னிய செலவாணி கொட்றது யாரு... நாமதான... தொழிலாளர்களா கொட்றாங்க...”

திங்கள், 11 நவம்பர், 2013

Dynamo - நம்ப முடியாத மேஜிக் நிபுணர்

ஜெ மோ, ந, மோ. நாடாளுமன்ற தேர்தல், கூடங்குளம், CHOGM இலங்கை, செஸ் போட்டி, ஸ்மால் பஸ் சர்ச்சை என இணையத்தில் ஏராளமான விவாதங்கள் மற்றும் counter விவாதங்கள்  கொட்டி கிடக்கின்றன.. அவற்றை எல்லாம் படித்து படித்து மன நோயே வந்து விடும் போல இருக்கிறது.. சற்று ரிலாக்ஸ் பண்ண வேண்டாமா...? சரிதான் சார்.. எப்பவுமே சிரீயஸ் விவாதம் மட்டுந்தானா..? ஆகையால் யான் பெற்ற இன்பத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா என்பதற்குத்தான் இந்த பில்ட்ப்..

வெள்ளி, 8 நவம்பர், 2013

ஜெமோவின் எழுத்துரு

இந்துவில் ஜெமோ தமிழ் எழுத்துரு பற்றி எழுதினாலும் எழுதினார்  அவர் கருத்துக்கு கண்டனம் குவிந்த வண்ணம் இருக்கின்றன..  எங்கு திரும்பியும் கடும் கண்டனக் கணைகள்...

புதன், 6 நவம்பர், 2013

மங்கள்யான்

''மங்களகரமான மங்கள வாரத்தில் மங்கள்யான்
மங்கலான வான்வெளியில் மந்தகாசத்துடன்...."

சரி.. சரி.. கவிதையை நிறுத்திக் கொள்கிறேன்.. மங்கள்யான் போகட்டும்... மங்கள்யான் கடந்த கடிமான பாதை வான்வெளியில் மட்டுமல்ல.. பூவுலகிலும்தான் அதாகப்பட்டது.. முதலில் மங்கள்யான் மீதான விமர்சனங்கள்....
(1) தீபஓளித் திருநாளில் இந்த  costly வாண வேடிக்கை தேவையா...? 
(2) உலகில் பட்டினியால் வாடும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியக் குழந்தை என்கிற போது இது      எதற்காக?
(3) முன்னாள் ISRO பெரும்புள்ளி மாதவன் நாயரே இந்த திட்டத்தை குறைகூறிவிட்டாரே
(4) நமது பக்கத்து வீட்டு பெரும்புள்ளி நண்பர் சீனா வேறு ‘இதெல்லாம் ஏழை இந்தியாவுக்குத்      தேவையா‘ என்று கருத்துரைக்கிறது...

என்று ஏக களேபரம்.. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மங்கள்யான் விண்ணில்  பாய்ந்து விட்டது.. so far so good என்று சென்று கொண்டிருக்கிறது.. நாமும் வாழ்த்துவோம்..

நேற்று (5.11.13) timesnow விவாதத்தில் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்..  கிட்டத்தட்ட 450 கோடி செலவு செய்து செவ்வாய்கிரகத்திற்கு அப்படி அனுப்ப இப்போது என்ன தேவை வந்துவிட்டது என்கிற திசைவழியில் சிலர் பேட்டியளித்தனர்.. ஐன்ஸ்டீன் இப்படி நினைத்திருந்தால் விஞ்ஞான வளர்ச்சியே வந்திருக்காது எனவும்.. சரியாக பேசுங்கள் ஐன்ஸ்டீன் தன் சொந்த பணத்தைத்தான் செலவழித்தார் எனவும் வாதப்பிரதிவாதங்கள்....இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... 

நமது நாட்டில்  தேவையற்ற விசயத்திற்கு செலவு செய்தேயில்லையா என்பதை நாம் ஒவ்வொருவரும் நமது மனசாட்சியைத் தொட்டு சொல்லிப்பார்ப்போம் ... எத்தனை ஆடம்பர விழாக்கள் எத்தனை ஊழல்கள் எத்தனை விரயங்கள் நடத்தியிருக்கிறோம்... ஒரு விஞ்ஞான வளர்ச்சிக்காக நாட்டில் வரிப்பணத்தை செலவு செய்தால் அதை எத்தனை பேர் குறை சொன்னாலும் நான் சொல்வது  ஒரேயொரு வார்த்தைதான் ‘சாரி...‘ 

நாளை சந்ததிகள் நன்றாக இருக்க நாம் நமது குழந்தைகளை படிக்க வைக்கிறோம்.. வெறும் சம்பாதிக்கும் மிஷினை உருவாக்குவதற்கு மட்டுமல்ல.. ஒருவன் ஆளுமை வளர்ச்சிக்கும்  அந்தப் படிப்பு தேவை என்பதை பலர் கூறுவார்கள்.. அதைப் போன்ற ஒரு முயற்சிதான் இந்த மங்கள்யான்...  குறை சொல்லுங்கள்.. அதற்கு ஆயிரம் பிற விஷயங்கள் இருக்கின்றன.. தயவு செய்து கம்பீரமாக வான் வெளியில் விரையும்,  எதிர்கால சந்ததியினரின் ஆளுமையை வளர்க்க உதவும்  அந்த மங்களயானைத் தவிர என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்..
=====================
சரி ஒரு டெயில் பீஸ் வேண்டாமா...?
அர்னாப் சொன்னார்.. ஒரு சமயம் 50 -60களில் ஆர் கே லக்ஷ்மண் ஒரு கார்ட்டுன் போட்டிருந்தாராம்.. அதில் அவருடைய வழமையான மிஸ்டர் பொதுஜனம் ஒட்டுத் தையல் போட்ட கோட்டை அணிந்து கொண்டு பாவமாக நிற்பாராம்.. பக்கதில் இருக்கும் இன்னொருவர், ஒரு   அமெரிக்கரைப் பார்த்துச்  சொல்வாராம்.. ’நீங்கள் சந்திரனுக்கு ஒரு மனிதனை அனுப்பனும்னு சொன்னிங்களே.. அந்த மனிதன் எதையும் தாங்கும் ஒருவராக இருக்கணும்னு சொன்னிங்ளே.. அதாவது அவருக்கு நல்ல தண்ணி கிடைக்கக்கூடாது நல்ல சாப்பாடு கிடைக்கக்கூடாது, நல்ல சுகாதாரம் கிடைக்ககூடாதுன்னு.. அப்படி பட்ட ஒருவர்தான் இவர்’ என்று அந்த மிஸ்டர் இந்திய பொது ஜனத்தைக் காட்டுவாராம்...

திங்கள், 21 அக்டோபர், 2013

மெட்ராஸ் கஃபே பற்றி கமலின் கருத்து...

”தெனாலி படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும்..நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், மெட்ராஸ் கஃபே படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு படம் எடுக்க முயன்றாலும் அதற்கு எனக்கு அனுமதி கிடையாது.

சனி, 19 அக்டோபர், 2013

சாமி சொன்னா சர்தான்....

உத்திர பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில்  சிவன் கோவில் உள்ளது.. அதை தற்போது அகழ்வாராய்ச்சிக்காரர்கள் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.. காரணம்

அருள்....

இன்சூரன்ஸ் அலுவலகத் தொழிற்சங்க தோழர் ராமன் அவர்கள் தன்னுடைய ப்ளாக்கில் ஒரு பதிவு வெளிட்டிருந்தார் அதற்கான சுட்டிhttp://ramaniecuvellore.blogspot.in/2013/10/blog-post_14.html 

அதைப் பார்த்ததும எனக்கு பழைய நினைவுகள் தோன்றின.. பத்து வருடங்களுக்கு முன்பு கேளம்பாக்கத்தில் பணி செய்து கொண்டிருந்தேன். பேருந்து நிறுத்தத்திலிருந்து நானும் என் நண்பரும் சேர்ந்து அலுவலகம் செல்வோம்.     பழைய கேளம்பாக்கம் பஸ் நிலையத்தின் அருகில் ஒரு சாராயக்கடை இருந்தது.  அதில் பல கடவுளர்களின் படங்களை அந்தக் கடைக்காரர் வைத்திருந்தார்.. அதற்கான மரியாதைகளுடன்..ஊதுபத்தி பூ etc etc .
நான் என் நண்பரிடன் அதைக் காட்டிக் கேட்டேன். அந்தக் கடைக்காரர் என்ன வேண்டிக் கொள்வார்? என்று.. “கடவுளே எனக்கு நன்றாக வியாபாரம் ஆக வேண்டும்..” என்றுதானே.. ”ஆம் உண்மை” என்றார் என் நண்பர். அப்போது நான் கேட்டேன்.  ஒரு வாதத்திற்கு இப்படி வைத்துக் கொள்வோம்.. அந்தக் கடையின் ரெகுலர் கஸ்டமராக திகழும் ஒரு குடிகாரன் வீட்டில் இதே கடவுள் படங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்... அந்தக் குடிகாரனின் மனைவி என்ன வேண்டிக் கொண்டிருப்பாள்
”சாமி.. என் புருசன் குடிய நிப்பாட்டனும்” என்று தானே என்றேன்... என் நண்பரும் ”அப்படித்தான்” என்றார்.
”அப்போது கடவுள் யாருக்கு செவி சாய்பார்...?
அந்தக் குடிகாரன் மனைவிக்கா...? அல்லது சாராயக் கடை ஓனருக்கா..?”
”சிக்கலான கேள்வி” என்றார் என் நண்பர்.
 நான் சொன்னேன்..  ”ஆனால் எளிமையான பதில் ஒன்றுதான்...கடவுள் நிச்சயமாக அந்த சாராயக்கடைகாரனுக்குத் தான் தன் அருளை வாரி வழங்குகிறார்” என்றேன்.  ”ஏனெனில் அவர்தான் கார் பங்களா என்று கடையில் வரும் லாபத்தைக் கொண்டு சொத்துக்கள் வாங்கிக் குவிக்கிறான்.. அந்த ரெகுலர் கஸ்டமர் மேலும் குடித்து குடல் வெந்து செத்துத்தான் போகிறான்...” 
என் நண்பர் வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார்.. 
 அதைப் போல இன்னொன்று கேள்வி... சரஸ்வதி பூசையை என் வீட்டில் என் மனைவி கொண்டாடினாள். அவளிடம் கேட்டேன்..”கல்விக்கு கடவுள் இருக்கும் நம் நாட்டில் ஒரு பல்கலைகழகம்கூட 200 ரேங்கில் இல்லை..” என்று.. அவள் எனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டாள்.
நீங்களாவது சொல்லுங்களேன்..

சனி, 28 செப்டம்பர், 2013

நான்சென்ஸ்

 தலைப்பின் வார்த்தையைச் சொன்னவர் திருவாளர் ராகுல் காந்தி அவர்கள்,  காரணம்.. ஊழல் அரசியல்வாதிகள்   தண்டனை பெற்றதும் பதவியிழக்க வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசரமாக  அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி அவசரச்சட்டத்தை நிறைவேற்றினார்கள். அதை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பிவைத்தார்கள்.

குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப்போன அவசரச்சட்டத்தை பா.ஜ.க உள்ளிட்ட ஒரு சில எதிர்க்கட்சிகளும், காங்கிரசிலேயே சிலரும் எதிர்த்து வந்த நிலையில் காங்கிரசின் அஜய் மக்கான் 27.9.13 அன்று செய்தியாளர் கூட்டத்தில் சட்டத்தை ஆதரித்துப் பேசினார்.. ராகுல் வந்து டமால் என்று சட்டத்தை கிழித்தெறி தூக்கிப் போடு என்று சண்டமாருதம் செய்ய அடுத்த நிமிடங்களில் அஜய் மக்கான் ”அதானே.. சட்டம் மோசம்..” என்று அந்தர்பல்டி அடிப்பதை டிவியில் மாற்றி மாற்றிக் காட்டினார்கள்.. பாவம்.. அவர் என்ன செய்வார்……

டிவி பத்திரிகை வலையுலகம் என்று அரசியல்வாதிகளை கிழிகிழி என்று கிழித்தாகிவிட்டது.. இங்குதான் எனக்கு ஒரு கருத்து வேறுபாடு உள்ளது..

அரசியல்வாதி என்றால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்  காரணம் அரசியல்வாதிகள் ஓட்டுப் பிச்சை கேட்பவர்கள்.. பதவியிழக்கச் சொல்லலாம்.. திரைப்படத்தில் கேவலமாகக் காட்டலாம்… அப்படியிருந்தும் அவர்கள் நம் வீட்டுக்கு வந்து தலையை சொறிந்து ஓட்டுக் கேட்பார்கள்..

ஆனால் அக்கிரமம் செய்யும் அதிகாரிகள், பண முதலைகள் சட்டத்தை வளைக்கும் மாஃபியாக்கள் இவர்களை யார் என்ன செய்யமுடியும் என்கிற கேள்வி மட்டும் எப்போதும் தொக்கி நிற்கிறது..


இதற்கு என்ன அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்?

விழா நாயகர்கள்

சமீபத்தில் சென்னையில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதைப் பற்றி பல செய்திகள் நாளேடுகளில் வார இதழ்களில் டிவி என்று பலரும் பல விசயங்களைச் சொல்லிவிட்டார்கள்.. உண்மைத் தமிழன் என்கிற சரவணன் நேரடியாக அந்த விழாவிற்குச் சென்று தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
பார்க்க http://www.truetamilan.com/2013/09/1.html

மேலும் கலைஞர் இதைப் பற்றிக் கூறும் போது "இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி,கமல், இளையராஜா உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் கூப்பிட்டு அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட  நிலையில்  நல்லவேளை என்னை கூப்பிடவில்லை, என் தன்மானம் காப்பாற்றப்பட்டது" என்று  கருத்து கூறியிருக்கிறார்,

இவையெல்லாம் நமக்குச் சொல்வது என்ன... திரையுலகில் சற்று வெளிச்சம் தன் மேல் பட்டவுடன்   கலைஞர்கள் உடனே செய்ய விரும்புவது அரசியல்..  மார்க்கெட் உள்ளவரை சினிமா.. பின்பு அரசியல் என்று தாவ எப்போதுமே தயாராக இருப்பார்கள்.. தமிழ் தெலுங்கு திரையுலகினர் அரசியலுக்கு வருவது மிக அதிகமாகத் தெரிகிறது. அரசியலிலும் தலைமை குணம் கொண்ட வழி நடத்திச் செல்லும தலைவர்கள் பற்றாகுறை வெற்றிடம் திகழ்கிறது.. அதனால் குறைந்த பட்சம் மக்களிடம் செல்வாக்குள்ள திரையுலகினர் அதுவும் ஹீரோக்களை அரசியலில் இறக்குமதி செய்யும் பாணி தமிழ்நாட்டில் இருக்கிறது.. ஏற்கனவே உள்ள அரசியலில் திரைப்பட பிண்ணனி உள்ளவர்கள்  இதை ஒரு தொழில(?) போட்டியாக நினைக்கிறார்கள் அதன் வெளிப்பாடுதான் இது என்று தோன்றுகிறது. 
அது சரி விஜய் ஒரு ஓரத்தில் நல்ல பிள்ளையாக உட்கார்ந்திருந்தாராம். பேச அழைத்த போது .. ”ஒரு நடிகை நாடாள முடியும் என்பதை அம்மா...”  என்று ஏதோ சொன்னாராம்.. 

சனி, 14 செப்டம்பர், 2013

இனி நிர்பயம் தான்….?

டெல்லி மாணவி பாலியல் வண்கொடுமை மற்றும் படுகொலை செய்த மாபாவிகளுக்கு தூக்கு….

சட்டத்தை பாராட்ட வேண்டும்.. மேல்முறையீடுகளில் எத்தனை வழக்குகள்எதிரிக்கு சாதாகமாகின்றன. தெரிந்த விஷயம்தான். வழமையாக மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள்…. தூக்கு தண்டனையால் என்ன பயன் என்று பல புள்ளி  விவரங்களைத் தருகிறார்கள்.. அதைக் காணும் போது மனம் தடுமாறுகிறது…  ஒரு தொலைக் காட்சி விவாதத்தில் பங்கேற்ற மனித உரிமை ஆர்வலர்  (வழக்கறிஞர்) கூறினார்….”புத்தர் காந்தி பிறந்த மண் இது.. ” , என்று வாதிட்டார்…  அதெல்லாம் சரிதான்… ஆனால்

• மன்னிப்பு வழங்கினால் மட்டும் இந்த மனித மிருகங்கள் திருந்திவிடுமா?
• நிலவும் முதலாளித்துவ அமைப்பில் வேலை நிறுத்தமே சட்ட விரோதம் எனும் போது, இதைப் போன்ற அயோக்கியத்தனத்தை ஆளும் வர்க்கம் புத்த ஞான பார்வை பார்க்குமா…?
• வளர்ந்து வரும் நவ நாகரீக சமூகம் ஆண்களை மட்டுமன்றி பெண்களையும் மேலும் உழைக்க பல விஷயங்களை, நவீனத்தைக் கற்றுத் தேற வலியுறுத்துகிறது.. இச்சூழலில் பெண்களை வெளியே வந்துதான் தீர வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்களின் மீதும் அவர்களின் உழைப்பு முன்னேற்றத்தின் மீதும் பொறமை கொண்ட எதிர் பாலினம் அவர்களை முடக்க எண்ணுகிறது.. அதன் வெளிப்பாடுதான் இவ்வித கேலி கிண்டல் அதிக பட்ச வன்முறை ஆகியவை.. இவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் புதைக்க  வேண்டிய தருணத்தில் உள்ளோம்.. அதனால் இதனினும் கடுமையான சட்டங்கள் தேவை..

ஆக மனித உரிமை ஆர்வலர்கள் வாதத்தை இவ்வித மனித மிருகங்களின் விஷயத்தில் ஏற்ற என் மனம் மறுக்கிறது..

குடிபுறங் காத்துஓம்பிக் குற்றங்கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில் 

திங்கள், 9 செப்டம்பர், 2013

காதல்

8/9/13 அன்று நீயா நானா நிகழ்ச்சியில் காதல் திருமணத்தைப் பற்றி ஒரு விவாதம் என்பதால் அதைப் பார்க்க நேர்ந்தது.. தற்கால சூழலில் அது ஒரு முக்கியமான விவாதப் பொருளாகி விட்டது.  நிகழ்ச்சியில் பலர் பேசியது ஏற்புடைத்தாக இல்லை. இருவர் தரப்பும்.... நம் நாட்டில் எந்த விஷயமும் சர்ச்சையாகவே உள்ளது. மனுஷ்யபுத்திரன் இயக்குனர் கரு பழனியப்பன் இருவரும் முன்னர் ஏதோ பிரச்சனையில் பிரச்சனையானதைப் (?) போல சண்டைப் போட்டுக் கொண்டார்கள், 

இவற்றுள் மணிகண்டன் நாலு வார்த்தை பேசினாலும் நச்சென்று பேசினார், அது தான் இந்த விவகாரத்தில் highlight….  அப்படி என்ன மணிகண்டன் சொன்னார் என்று கேட்கிறீர்களா….? ” நமது நாட்டில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதைத் தீர்க்க எந்த ஒரு social institutions  இல்லை … இது மிகப்  பெரிய குறை…”

ஆம் அவர் சொன்னது எத்தனை அர்த்தபுஷ்டியான கருத்து.  இஸ்லாத்தில்  அவர்கள் பிரச்சனைகளை ஜமாத் என்கிற அமைப்பு  தீர்க்க  முயல்கிறது..  அதைப் போல இந்து அமைப்பில் ஏதும் இல்லை… குடும்பம் என்கிற அமைப்புதான் அத்தனையையும் தீர்க்க முயலுகிறது…  அதன் வரம்பு அதன் ஜனநாயகம் என்பதெல்லாம் சர்ச்சைக்குரியது… இதைப் பற்றிய ஒரு வெளிப்படையான விவாதம் தேவை…

சனி, 7 செப்டம்பர், 2013

என்ன கொடுமை சரவணன்....

சில செய்திகள் நாட்டு நடப்புகள் எனக்குக் கோபம் சிரிப்பு ஆச்சர்யம் போன்ற உணர்வுகளை கலந்து கட்டித் தருகிறது..  நான் தெரிந்து கொண்ட அவைகள் சில
(1) நமது நாட்டில் வங்கிப் பணத்தை கடன் மூலமாக திருப்பி செலத்தாத சில தொழிலதிபர்கள்  பாக்கி வைத்திருக்கும் தொகை 5 லட்சம் கோடி என்று சிபிஐ அதிகாரி சின்கா  சமீபத்தில் தெரிவித்துள்ளார். அன்றாடம் நாளேடுகளில் பர்சனல் லோன் வீட்டுக் கடன் ஆகியவற்றை நிலுவை வைத்துள்ள சாமானிய நடுத்தர மக்களின் பெயர்களை பல பேப்பர்களில் கட்டம் போட்டு அந்தந்த வங்கிகள் வெளியிடுகின்றன.  மேற்படி வங்கிகளை நாமம் போட்ட முதலாளிகள் யார்  என்பதே தெரியாமல் போகிறது. மேல் நடவடிக்கைகள் என்ன எடுத்தார்கள் என்பதும் மர்மமாக  போகிறது.. ஒரு வேளை கோடிக் கணக்கில் ஏமாற்றினால் அது தவறுயில்லை லட்சக்கணக்கில் ஏமாற்றினால்தான் தவறு போலும்..  போரில் லட்சக்கணக்கான பேர்களை கொன்றால், அது போர்க் குற்றம்.  அதற்கு தண்டனை கிடையாது அதே போல் யாராவது ஒருவனை அடித்தால்  போதும் அது குற்றவழக்காகி விடுகிறதே அதைப் போல என்று நாம் மேற்படி செய்தியை நினைத்துக் கொள்ள வேண்டும் போலும்
(2) ஆசாராம் அல்லது அஸ்ராம் அல்லது அசரம் சாமியாரை ஒரு வழியாக கைது செய்து விட்டார்கள் அவரிடம் பல பரிசோதனை செய்தார்களாம் (potency test ) அத்துணைக்கும் சாமி ஒத்துழைத்தாராம்.. சந்தோசம்.. அப்படியே குற்றத்தை.....
(3) சீனாவிடம் ஒரு அங்குல நிலத்தைக் கூட நாம் இழக்க வில்லை என்கிறார் அமைச்சர் அந்தோணி. TIMESNOW தொலைக் காட்சியில் சீன எல்லையை ஒட்டிய அருணாச்சலபிரதேசத்தில் சீன சீருடையினர் அநியாயமாக எல்லைக் கடந்து ஓடுவதை காட்டினார்கள்.. அட தேவுடா...
(4) பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களைப் பார்த்தால் நமது நாடு பெண்களுக்கு பாதுகாப்பானதுதானா என்ற சந்தேகமே வந்து விடுகிறது
(5) சமீபத்தில் ஒரு செய்தி- தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்களுக்கு dress code தேவை என்கிற சட்டம் வருமாம்.. எந்தக் கோவில் மீதும் சத்தியம் செய்து கூறுகிறேன். . இது தேவையற்றது என்று.. 

திங்கள், 2 செப்டம்பர், 2013

எங்கே செல்லும் இந்தப் பாதை

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு பற்றி செய்திகள் தாங்கி வராத நாளேடுகள் டிவிக்கள் தற்போது சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம்.. சரி.. டாலர் எத்தனை ரூபாய் ஆனால் நமக்கு என்ன என்று நாம் வாளாயிருக்க முடியாது. நிச்சயமாக நம்மை பாதிக்கும்.. இப்படிச் சொன்னவுடன் அதெப்படி என்று சில நண்பர்கள் உறவினர்கள் கேட்கிறார்கள். எளிமையாக புரியும் படி சொன்னால்..

1) நம் நாடு  வர்த்தகத்திற்காக எப்போதோ உலக பொருளாதாரத்துடன் இணைத்துக் கொண்டு விட்டது

(2) வர்ததகம் மட்டுமல்ல வேலை வாய்ப்பிற்கும், படிப்பிற்காகவும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர் அனேகம்

(3) நமது அத்தனை பரிவர்த்தனைகளும் அமெரிக்க டாலரில்தான் நடைபெறுகிறது

(4) பெட்ரோல் டீசல் வர்த்தகம் எல்லாம் டாலரில்தான்

(5) நமது நடப்பு கணக்கு பற்றாக்குறை நாளாக நாளாக அதிகமாகிக் கொண்டிருக்கிறது

அதென்ன நடப்பு கணக்கு பற்றாக்குறை...? நாம் ஏற்றுமதி செய்கிறோம் அதிலும் நாம் குறிப்பிடும் பண மதிப்பு டாலரில்.. அதே போல் இறக்குமதியும் அப்படியே...

இந்தச் சூழலில் இறக்குமதி செய்ய அதிகமாக டாலர் கொடுத்து வாங்குகிறோம்..ஏற்றுமதி செய்யும் போது நமக்கு வரும் டாலர் பணம் இறக்குமதிக்குத் தருவதைவிட குறைவாக இருப்பதால் நாம் டாலரை இழக்க வேண்டியிருக்கிறது. தினமணியில் குருமூர்த்தி தொடர் கட்டுரை எழுதுகிறார் அதில் அவர் இந்தியா ஒரளவு தாக்கு பிடிக்க முடியவதற்குக் காரணம், வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பும் பணமும் ஒருவகையில் நம்மை பெரும் பிரச்சனையிலிருந்து காப்பாற்றியுள்ளதாகக் கூறுகிறார். இதன் காரணமாக நாம் சந்திக்கும் உடனே பிரச்சனை பெட்ரோல் டீசல் காஸ் விலை உயர்வு. அதன் தொடர்ச்சியாக வரும் இதர பிரச்சனைகள்.. உடனடி தீர்வு அவசியம். இல்லையேல் சமூக கொந்தளிப்புகள் அதிமாகும்..

என்ன செய்யப் போகிறார்கள் ஆள்பவர்கள்?


புதன், 28 ஆகஸ்ட், 2013

சட்டத்தின் முன்......?

ஆசாராம் பாபு என்கிற சன்யாசி அல்லது godman பற்றிய செய்திகள் தெரியுமா...?
ராஜஸ்தானில் உள்ள தன்னுடைய ஆஸ்ரமத்தில் அருள்பாலிக்கும் ஆள்தான் ஆசாராம்... ரொம்ப ஆசாராமான ஆள் போலும்... அவர் மீது 15 வயதுள்ள சிறுமி பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.. அதுவும் டெல்லியில் வந்து புகார் கொடுத்துள்ளார். ஏன் அப்படி..? அந்த ஆள் மிகவும் அரசியல் செல்வாக்கு உடையவராம். அதனால்.

நேற்று நடந்து timesnow விவாதத்தில் பங்கேற்ற மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த  பிஜேபி எம்எல்ஏ ஆசாராம் ஒரு சாமியார். அவர் காங்கிரஸ்சை அடிக்கடி விமர்சித்தார். அதனால் இது ஒரு அரசியல் காழ்பு காரணமானது என்றவரை அர்னாப் தன் கேள்விக் கணைகளால் வெளுத்து வாங்கினார். அந்த ஆள் நிகழ்ச்சியை விட்டே வெளிநடப்பு செய்துவிட்டார்.. காங்கிரசை கேட்டால் பிஜேபி மீது புகார் சொல்கிறார்கள்.. பிஜேபியை கேட்டால் காங்கிரஸ் மீது புகார் சொல்கிறார். ஒரு வழியாக  FIR பதியப் பட்டு அவரிடம் விளக்கம்(?) கேட்கப் பட்டிருக்கிறது.. அந்த (ஆ)சாமியும் நான்கு நாட்களுக்குப் பிறகு விளக்கம் சொல்வாராம்...  

சட்டத்தின் முன் அனைவரும் சமம்.. நம்புவோம்...

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

மிருகங்கள்

மும்பையில் ஒரு பெண் நிருபருக்கு நேர்ந்த கொடுமை, நம் நாட்டின் ஒட்டு மொத்த மானமும் பறி போகச் செய்து விட்டது.   பாலியல் வன் கொடுமை என்பது என்னவென்றால் அது ஒட்டு மொத்த மனித இனத்தின் மேல் தொடுக்கப் படும் கொலை பாதக செயல். சுருக்கமாக


என்றுதான் சொல்ல வேண்டும்.. பெண் என்று நாமே ஒரு வட்டத்துக்குள் அடைப்பது மிகப் பெரிய அவலம் என்றே கூற வேண்டும்.  இதனால் மனித இனம் மேலே உயர தடுக்கப் படும் தீவிரவாதச் செயல்.

இதை வேரோடும் வேரடி மண்ணோடும் களைய என்ன செய்யப் போகிறோம்?

புதன், 14 ஆகஸ்ட், 2013

தலைவா.....

சமீப்த்தில் தலைவா படத்தைப் பற்றி செய்திகள் இணையத்தில் ஏராளாமாக உலவி வருகின்றன.... அந்தப் படம் தமிழ் நாட்டில் மட்டும் இன்னமும் வெளியாகவில்லை

அதன் காரணங்கள் பற்றி ஏராளமான செய்திகள் இணையத்திலும் செய்தித்தாள்களிலும் வந்தாலும்  இன்சூரன்ஸ் சங்கத் தோழர் நடத்தும் இணைய பக்கம் பார்க்க நேர்ந்தது அதன் முகவரி http://ramaniecuvellore.blogspot.in/2013/08/blog-post_13.html அதில் ஒரு போஸ்டர் அகில இந்திய தலைமை இளைய தளபதி விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பாக வெளியிடப்பட்டதை தோழர் போட்டிருந்தார்.. அந்தப் படம் என்ன பிரச்சனையில் உள்ளது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக போஸ்டர்  சொல்லிவிட்டது.

வெள்ளி, 19 ஜூலை, 2013

”வாலி” பன்

தமிழ் உலகைச் சுற்றிய ”வாலி” பன்


அரை நூற்றாண்டுகளாய் தமிழர்களுக்கு தன் பாடல் வரிகள் மூலம்
தமிழை கற்றுத் தந்த பேராசான் மறைந்தார்..
ஆனால் அவர் தந்த பாடல்கள் மூலம் என்றும் வாழ்வார்

வியாழன், 18 ஜூலை, 2013

எங்கே தவறு செய்கிறோம்...

பீகார் மாநிலத்தில் நேற்று (17.7.13) ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 22 குழந்தைகள் (அதற்கு மேலும் என்கிறது ஒரு செய்தி) பலியாகியிருக்கின்றனர். பொதுவாக சுகாதாரமற்ற உணவுகளால் குழந்தைகள் பாதிப்படைவதை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்டிருக்கிறோம் ஆனால் நேற்று நடந்த விஷ(ய)ம் மிக மிகக் கொடுமையானது.. என்ன மாதிரியான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது.. இந்த பூமிப் பந்தில் எந்தப் பகுதியிலும் இதைப் போன்ற அயோக்கியத்தனத்தை கேட்டிருக்க முடியாது.. ஆமாம்.. அந்தக் குழந்தைகள் சாப்பிட்ட உணவில் ஏதோ பல்லியோ பாம்போ விழுந்திருக்கவில்லை (அதுவும் நேற்றே - ஒரு சம்பவம் பீகாரிலும் இன்னொன்று ராஜஸ்தானிலும் நடந்திருக்கிறது). 

அந்தக் குழந்தைகள் சாப்பிட்ட உணவில் organic phosphorous என்கிற விஷம் கலந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். அது ஒரு பூச்சிக் கொல்லி மருந்தாக பயன் படுத்துவதாகும்... அதெப்படி உணவில் அந்த விஷம் கலக்கப் பட்டிருக்கும். அதுவும் சாதாரண ஏதுமறியா ஏழைக் குழந்தைகள் சாப்பிடும் சாப்பாட்டில் விஷம்  இருக்க முடியும்..அவர்கள் ஏதாவது யாருக்காவது அரசியல் எதிரிகளா.. வியாபாரப் போட்டியில் கலந்து கொண்டவர்களா..  எந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்க முடியும் ? அதற்கு இப்படியொரு தண்டனை தர முடியுமா...? இப்படி ஒரு சம்பவத்தை கற்பனையில்கூட காண முடியாதே...சகிக்கவே முடியாத விஷயம்தான் நம் நாட்டில் நடக்குமா..  கொடிய விலங்கைக் கூட அடக்க அது சாப்பிடும் உணவில் மயக்க மருந்ததானே கலப்பார்கள்.. அய்யோ...  மனது ஆறவேயில்லை.. உத்தரகாண்டில் நடந்த பேரழிவை விட  இது மகா கொடுமையாக உள்ளதே...

எங்கே தவறு செய்கிறோம்...

புதன், 10 ஜூலை, 2013

THE OSAMA FILES

பாகிஸ்தானியர்கள் உண்மையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தரமாட்டர்கள் போலிருக்கிறது.  அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்வார்களே தவிர பிறரிடம் விட்டுத் தர மாட்டார்கள்.  எதை வைத்துச் சொல்கிறேன் என்கிறீர்களா… நேற்று நடந்த ஒரு தொலைக் காட்சி விவாதத்தைப் பார்த்துத்தான் சொல்கிறேன். TIMES NOW தொலைக்  காட்சியில் நேற்று (9.7.2013) ஒரு நிகழ்ச்சி.. அதில்  ஜி பார்த்தசாரதி முதல் மூன்று பாக்கிஸ்தானிய கர்னல்கள் வரை கலந்து கொண்டார்கள். விஷயம் இதுதான்...
ஓசாமா பின் லேடன் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் பாகிஸ்தானில் தங்கியிருக்கிறார். Abbottabad பகுதியில் அவர் அந்தப்  பெரிய வீட்டில் தங்கியிருந்து  அந்த வீட்டிற்கு  எந்த ஒரு வரி கட்டாமல்   வாழ்ந்திருப்பது முழுக்க முழுக்க ISI மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின்      சிலர் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்காது என்று தெளிவாக    பாகிஸ்தானால் அமைக்கப்பட்ட  நிபுணர் குழு 300 பக்கஅறிக்கையில்  புட்டுபுட்டு வைத்திருக்கிறார்கள்.   

அதைப் பற்றி அர்னாப் அந்த மூன்று பாகிஸ்தானியரிடம் கேட்க,  அவர்களோ அந்த அறிக்கையை  தூக்கிப் போடுங்கள்.. நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று அதற்கு பல சால்சாப்புகளை அடுக்கிக்  கொண்டிருந்தார்கள்.  ஒரு பாகிஸ்தானி கர்னல் ”இந்தியரே இப்படித்தான்... நீங்கள் ஒருதலை பட்சமானவர்கள்...you are biased...“என்று அர்னாப் மீது பாய்ந்தார்..
அர்னாப் மீண்டும் மீண்டும் சொல்லிக்  கொண்டே இருந்தார்”அய்யா இது ஏதோ எனனுடைய ரிப்போர்ட் இல்லை..உங்கள் அரசாங்கம் அமைத்த குழுவின் ரிப்போர்ட்”, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்..
ம்ம்.. அந்த பாகிஸ்தானி  காதில் போட்டுக் கொள்ளாமல் அவர் பாட்டுக் ஏதோ சொல்லிக்கொண்டே சென்றார்.. அதில் ஒரு பாகிஸ்தானியர் மைக்கை விட்டு எறிந்து விட்டு வெளிநடப்பே செய்து விட்டார்.

இப்போது  சொல்லுங்கள்.. நான் சொல்வது சரிதானே....

சனி, 6 ஜூலை, 2013

இளவரசன் திவ்யா

”ஊருல ஒலகத்தில எங்க கத போலவும் நடக்கலயா...”

இளையராஜாவின் கிராமிய மணம் கமழும் இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம்..
 இளம் உள்ளங்கள்...... குறிப்பாக பதின்பருவம் என்பது மிகவும் சிக்கலானது. உள்ளங்கள் இடமாறும் வயது.. அதற்கான காரணங்கள் எவை என்று எப்படி அறுதியிட்டுச் சொல்ல இயலும்.. 20 - 30 வருடங்களுக்கு முன்பே நமது பார்வைகள் மாறித்தான் போயிருக்கின்றன.. சாதி மதம் மொழி இனம் பேதம் என்று எத்தனையோ விஷயங்களில் much water flow under the bridge என்றே சொல்ல வேண்டும். காரணம் உலகம் மேலும் மேலும் ஜனநாயகப் பட, நமது பொதுப் புத்தி என்பது கணிசமான அளவிற்கு மாறித்தான் போய் உள்ளது.

இந்த நேரத்தில்தான்.. அரசியல் ஒரு தனிப்பட்ட வாழ்க்கைவரை பாய்ந்திருக்கிறது. 

வயது அந்தஸ்து சமூகக் கட்டுப்பாடு போன்ற விஷயங்களை அந்த ஜோடி பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டுவது எளிதுதான்.. அப்படி ஒரு வாதத்திற்கு அவர்கள் தவறே செய்திருந்தாலும் அதைத் தட்டிக் கேட்டும் உரிமை என்பது அந்தந்த குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்தது..  முழுக்க முழுக்க private affair.....

என்னவென்று சொல்வது... அந்தச் சின்னப் பையனின் மரணம் உண்மையில் ஈரக்குலையை நடுங்க வைத்துவிட்டது. என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை...

வெள்ளி, 28 ஜூன், 2013

ஒரு பானை சோற்றிற்கு....

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய பேரழிவு பற்றிய செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துகிறது.. இதோ கீழே உள்ள படத்தில் இருக்கும் மூன்றோ (அ) இரண்டோ வயது குழந்தை...
ராணுவத்தினர் அந்தப் பேரழிவு பகுதியிலிருந்து மீட்டெடுத்தனர். அந்தக் குழந்தையின் இரண்டு கால்களும் ஃபிராக்சர். தாய் தந்தையர் காணவில்லை. மருத்துவமனையில் நிதம் குறிப்பாக இரவு நேரங்களில் ”அம்மா.. அம்மா” என்று அழும் காட்சிகளை  தொலைக் காட்சி செய்தியில் காட்டினார்கள். மனம் நொறுங்கிப் போனது.. அந்த நிருபர் சொன்ன வாக்கியம் ”இதைப் போல எத்தனையோ...” என்று சொல்லி நிறுத்தினார்.. எந்தக் கல் நெஞ்சையும் கரைய வைக்கும் காட்சிகள் அவை... 

இவற்றை எங்ஙனம் புரிந்து கொள்வது.. பழுத்த ஆத்திகனின் இறை நம்பிக்கையையும் தகர்க்க வைக்கும் நிகழ்வு இது...

 இந்த நேரங்களில் மனிதம் மட்டுமே உதவ முடியும்.. ஆம்.. அனுபம் கேர்.. இந்திப் பட உலகில் குணச்சித்திர நடிகர்.. அவர் பவுண்டேஷன் மூலம் அந்தக் குழந்தைக்கு உதவ முன் வந்திருக்கிறார்.. அந்தப் பெண் வளர்ந்து படித்து முடிக்கும் வரை அதற்கான செலவை ஏற்றுக் கொள்ள முன் வந்துள்ளார்.. வாழ்க அனுபம் கேர்..Mr Anupam ji.. you really care... 
இரு கரம் கூப்பி வணங்குகிறேன்... 

திங்கள், 24 ஜூன், 2013

எதுல முதல் பாருங்க....

மிக மிக வருத்தமான செய்திகளை பகிர கஷ்டமாகத்தான் இருக்கிறது.. சாலை விபத்துகளில் இந்தியாவில் முதல் இடத்தில் இருப்பது நமது தமிழகமாம்... இந்து நாளேட்டில் இன்று (24.6.13) படிக்க நேர்ந்தது.. என்ன காரணம் என்று பட்டிய்ல் இட்டால்....

1) அபரிமிதமான வாகனங்கள்  டூ மற்றும் ஃபோர் வீலர்களின் ஆக்கிரமிப்பு
2) நல்ல சாலைகள் குறைவு
3) அப்படி இருந்தாலும் பராமரிப்பு குறைவு
4) சாலைகள் போடும் போதும் ஊழல்கள்
5) சாலைவிதிகளை மதிக்காதது
6) சாலைவிதிகள் பற்றி அறிவு குறைபாடு
எல்லாவற்றும் மேலாக
7) மது....

இந்தப் பட்டியிலில் மிக பயங்கரமான முதன்மை குற்றவாளி (prime accused) மதுதான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் சட்டம் பாய வேண்டும்தான்.  ஆனால் நடைமுறையில் அது சரிப்பட்டு வருவதில்லை. காரணம். அந்த நபர்களின் செல்வாக்கு (அனைத்து விஷயங்களிலும்) அப்படி. சாலை விபத்தால் எத்தனை அங்க ஹீனங்கள் உயிரிழப்புகள்... கொடுமை...இதை ஒழிக்க வழி செய்ய வேண்டும்..

ஒரு டெயில் பீஸ்....

ஒரு முறை என் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். ஒரு போக்கு வரத்துக் காவலர் எங்களை தடுத்து நிறுத்தி லைசன்சை காட்டச் சொன்னார். என் நண்பர் பேப்பர்களை தேடிக் கொண்டே  சொன்னார் ”ஒழுங்கா பேப்பர் வச்சுருக்கறவங்களை  அவசரமா போறப்ப சும்மா சும்மா தொந்தரவு பண்ணி நிறுத்திறிங்க.,, அதோ தண்ணி ஏத்திக் கிட்டுப் போறனே மீன் பாடி வண்டி.. அவன் நம்பர் ப்ளேட்டையே போட்டுக்கறதில்லை.. அத கேட்டிங்களா..”என்றார்.. நான் சற்று கலவரமானேன்.. என்ன இந்த மனுஷன் தேவையில்லாமல் ஒரு காவலரிடம் வாக்குவாதம் செய்கிறார் என்று.. ஆனால் பக்கதிலிருந்த இன்னொரு போ. காவலர் ”அவரு சொல்றது எத்தன கரட்க்டு.. விடுப்பா.. சார் நீங்க போங்க சார்.. சாரி” என்று போகச் சொல்லிவிட்டார்.. எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.. ஆனால் அதே சமயம் இதைப் போன்ற அனுமதியில்லாமல் செல்லும் வாகனங்கள் படு வேகமாக சாலையில் செல்லும் போது எரிச்சலாக இருக்கும்...






வெள்ளி, 21 ஜூன், 2013

இமயத்தில் சுனாமி

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேய் மழை அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது.. ஹரித்வார் ரிஷிகேஷ், சமோலி, ருத்ரபிராயக், கேதார்நாத், பத்ரிநாத் என்று அடித்துத் துவைத்த மழை  அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு சாலைகள் உடைப்பு ஆறுகளில் வெள்ளம் எத்தனையோ உயிர்ப் பலிகள் என்பவை சாதாரணமாக  நம் கற்பனைக்கு எட்டாத பேரிடர் என்பது அங்கிருந்து வரும் செய்திகள் படங்கள்  வீடியோ கிளிப்பிங்கள் ஆகியவற்றைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடிகிறது.. என்றோ பார்த்த ஒரு படத்தில் வசனம் ஒன்று  ஞாபகத்திற்கு வருகிறது.. ”ஒரு சம்பவம் நடந்தால் எப்படி எப்போது என்று கேட்காதே ஏன் என்று கேள். அப்போதுதான் உன்னால் பிரச்சனையை கையாள முடியும்” என்று .. உண்மைதான்.. இந்த தேசிய  பேரிடர் (national disaster) ஏன்? என்ற கேள்வி தவர்க்க முடியாததாக உள்ளது.  நேற்று (20.6.13) times nowல் இரவு 9 மணிக்கு அர்னாப் கோஸ்வாமி அலறிக் கொண்டிருந்தார்..

சில ஆண்டுகளுக்கு முன்பு CAG ஒரு அறிக்கை கொடுத்திருந்தாராம்.. இமயத்தில் மடிப்புகளில் இருக்கும் இந்த ஊர்களில் பல இடங்களில் unathorized constructions அதிகமாக இருப்பதாகவும் அதைத் தடுக்க மாநில அரசுகள் முன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வறிக்கையில் பதிவாயிருக்கிறதாகவும்
படித்துக் காண்பித்தார்.  அந்த மாநிலங்களில் ஆண்ட காங்., பிஜேபி அரசுகள் அனைத்தும் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அவர் உபயோகித்த வார்த்தைகள் timber mafia unathorized constructions encroachment என்று அதற்குக் காரணம் அனைத்து கட்சியினரும்தான் என்று சாடிப் பேசினார். 

அவர் பேசியதிலிருந்து பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடிந்தது. அங்கு தொடர்ச்சியாக சுற்றுப் புறச் சூழல் ஆர்வலர்களின் குரல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது தெரிகிறது. சுந்தர்லால் பகுகுணா போன்றவர்கள் இவ்வித ஆபத்துக்களை சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார்.  ஆனால் அங்கு மேற்படி வேலைகளில் பல கோடி ரூபாய் மூதலீடுகள் செய்யும்  பண முதலைகள் தொடர்ச்சியாக ஆட்சியாளர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தே தங்கள் தொழிலை நடத்தி வருகிறார்கள்.  வர்த்தகமே கிரிமினல்மயமானதிற்கான அடையாளம்தான் அது. இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது.  எங்காவது சுற்றுப் புறச் சூழலியர்கள் சில விஷயங்களைச்  சொன்னார் என்றால் சூழலியிலைப்  பற்றி  சுட்டிக் காட்டினார்கள் என்றால், அவற்றை அசட்டை செய்யும்  மனப்பாங்கு பலருக்கு (என்னையும் சேர்த்துத்தான்)  உள்ளது. இவை உடனடியாகக் களையப் பட வேண்டும். அவர்கள் பேச்சுக்கு என்று மரியாதை வருகிறதோ அப்போதுதான்
இந்தப் புவியை காக்க முடியும். யாருக்கோ எங்கோ நடக்கிறது என்று நாம் வாளாகயிருக்கலாம்.. அந்தப் பேரிடரில் மாட்டிக் கொண்டு தவிக்கும் 399 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் (மற்றவர்களைப் பற்றி கவலையில்லை என்று சொல்லவில்லை அவர்களிடம் தமிழில் பேச முடியாது என்பதால்) குடும்பதினிரிடம் பேசிப் பாருங்கள். பிரச்சனை எந்த அளவு வீரியமிக்கது
என்பது புரியும்.





திங்கள், 17 ஜூன், 2013

எங்காத்துக்காரரும்...

இப்பொதெல்லாம் என்னைப் பார்ப்பவர்கள் கேட்பது ”இப்போ என்ன கதை எழுதிட்டு இருக்கே/கிங்க...” என்பதே..
நண்பர் எழுத்தாளர் சங்கர் அவர் தயாரிக்கும் இருவாட்சி தொகுப்பிற்குக் கதை கேட்டார். ”என்னப்பா..இது” என்கிற கதையை எழுதிக் கொடுத்தேன். அன்புடன் பிரசுரித்தார். நான் கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு எழுதிய ஒரு கதை அதுதான்.... 1995 முதல் 2000 வரையிலான ஒரு வித மன எழுச்சியில் எத்தனை கதைகள் எழுதினேன் என்பதே தெரியவில்லை.. உருப்படியாக 100 சிறுகதைகள் தேரும்.. ஒரு நாவல் ஒன்றும் எழுதினேன்.. 100ல் பெரும்பான்மை கதைகள் புத்தமாக வந்திருக்கிறது. 5 தொகுதிகளாக பிளஸ் ஒரு நாவல்.. ஏன் இப்பொதெல்லாம் சிறுகதைகள் அதிகமாக எழுதவில்லை என்ற கேள்விக்கான
விடை எனக்கே சரியாகத் தெரியவில்லை.. இயன்ற வரை கதைகளை டிஜிட்டல் வடிவத்தில் சேமிக்க ஆசைதான். சில கதைகளை http://badristory@blogspot.com க்குப் போய் படித்துப் பார்க்கவும். இது எனது அன்பான வேண்டுகோள்.   நான் இப்பொதெல்லாம் சிறுகதைகளை அதிகமாக எழுததாற்கு காரணங்களை அடுக்கிப் பார்க்கிறேன்.
(1) இதுவரை எழுதாத விஷயம்  ஒன்றை எழுத முயல வேண்டும்
(2) அப்படி எழுதினாலும் ஏற்கனவே எழுதியதைப் போல இருப்பது
(3) “ஆமா.. மக்கள் அப்படி படிக்கிற மாதிரி தெரியல...டிரெண்ட் மாறிப் போனதைப் போல இருக்கே“
(4) உலகம் எலக்ட்ரானிக்ஸ் வழியாகத்தான் இயங்குது.. பத்திரிகைகளே தற்போது கதைகளை குறைத்திருப்பதாக
    தோன்றுகிறது
(5) அபரிமிதமாக ஊடக (டிவி நெட்) வளர்ச்சி உ.ம் facebook twitter blogs போன்றவை

மேற்சொன்னவற்றில் அனைத்துக் காரணங்களும் எனது தற்போதைய நிலைக்குக் காரணமாக இருக்கலாம்.. சரி..   தற்போது எனது எழுத்தால் நான் பெற்ற பயன்களை பட்டியிடுகிறேன்....எத்தனை நண்பர்கள் எழுத்தாளர்கள் என் எழுத்தின் மூலம் கிடைத்தார்கள்.. மிக பிரம்மிப்பான விசயம் அதுதான்.. 96 அல்லது 97 அன்று எனது சிறுகதைகள் தினமணிக்கதிரில் அவ்வப்போது பிரசுரமாகும்.. கவிஞர் ராஜமார்த்தாண்டன் தொலைபேசியில் தினமணி அலுவலகத்திற்கு வரச் சொன்னார். பெரும் பரவசமாக இருந்தது.. இலக்கிய உலகில் கவிஞர் பெரும் புள்ளி.. அவர் என் கதைகள் பிடித்திருப்பதாகவும்
கதிரில் பிரசுரிக்கப் போவதாவும் நேரில் அலுவலகம் வரச் சொன்னபோது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நேரில் சந்தித்துப் பேசினேன். கனவில் நடப்பதைப் போன்று இருந்தது.  கதிர் ஆசிரியர், இதயம் ஆசிரியர், புதிய பார்வை ஆசிரியர், இலக்கிய சிந்தனை பொறுப்பாளர்கள் ஞாநி பாஸ்கர்சக்தி  பால்நிலவன்,  அமரர் ஜெயந்தன் என்று பெரும் பட்டியல் நீண்டு கொண்டிருக்கும் அந்த நாட்கள்
இனிமையானதுதான்.

சனி, 15 ஜூன், 2013

மர்ஃபி விதிகள்

நீங்கள் மர்ஃபி விதிகள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா..
கிட்டத்தட்ட 1000 மர்ஃபி விதிகள் இருக்கின்றன...

மனிதன் என்பவன் இமயமாகலாம்

அபூர்வ திறமை பெற்றவர்கள் உண்மையில் மிக எளிமையாக
innocent ஆக இருப்பார்கள் என்று எங்கோ படித்திருக்கிறேன்.
உண்மைதான் என்பதை விஜய் டிவி மூலம் நிருபணம் ஆகிக் கொண்டு 
வருவதை உணர்ந்தேன்.. சமீபத்தில் சூப்பர் சிங்கர் என்கிற நிகழ்ச்சியில்
இரண்டு பிரபலங்கள் கலந்து கொண்டதைப் பார்க்க நேர்ந்தது.. 
ஒன்று பி சுசீலா 
இன்னொருவர் எல் ஆர் ஈஸ்வரி
..
அவர்கள் பேசிய விதம் body language பிற கலைஞர்களை பாராட்டும்
விதம், தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்தது ஆகியவை
வைத்துப் பார்க்கும் போது “சே எத்தனை வெள்ளெந்தி மனிதர்களாக இருக்கிறார்கள்“  என்பது தெரிந்தது. அடித்துச் சொல்ல முடியும் ஒரு இம்மிளவுகூட கர்வமில்லாத வீண் வறட்டு கௌரவமில்லாத பேச்சு சிரிப்பு etc etc., சாதாரணமாக ப்ளாக் எழுதினாலே (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) ஏதோ கொம்பு முளைத்தைப் போல எண்ணும் சாதாரண மனிதர்கள் முன்பாக இந்தப் பிறவி திறமையாளர்கள் ஒரு இமயமலையைப் போலத் தெரிகிறார்கள்.. மனிதன் என்பவன் இமயமாகலாம் என்றுதான் தோன்றியது.

திங்கள், 3 ஜூன், 2013

வலி................

மிகவும் வலியுடனும் வேதனையுடனும் இந்தப் பதிவை எழுத வேண்டியுள்ளது
சுஜாதா.. பெரும் பிம்பம்... என்னை பொருத்த வரை... 

திருமதி சுஜாதா சொன்ன 2.6.13 தினகரன் வசந்தம் இதழில்  வெளியான கருத்து என்னைப் போன்ற பல சுஜாதா வாசகர்களால் சீரணிக்க முடியாதபடிதான இருக்கும். அதே சமயம், சுஜாதாவை  எதிர்ப்பவர்களுக்கு இது ஒரு இனிப்பான விசயமாக கருத வாய்ப்புள்ளது.

திருமதியாரின் கருத்து என்பது தேவயைற்ற சர்ச்சைதான்.. மேடையில் பேசுபவர்களுத் தெரியும். ஒருவர் கருத்தையோ அல்லது ஒருவரையோ  தாக்கிப் பேசவேண்டும் என்றால், அவர் முன்பாகச் செய்யவேண்டும்.

இத்தனைக்கும் மிகவும் படித்த பாரம்பரிய  குடும்பத்தைச் சேர்ந்த திருமதியாருக்கு தெரியாத விசயமல்ல . அவர் எடுத்துச் சொன்னால் சுஜாதா காது  கொடுத்து கேட்காதவர் என்பதை நம்பவும் இயலவில்லை. ஜப்பானிய ”ரோஷாமான்” படத்தில் சொல்வதைப் போல ஒரு விசயத்திற்கு  இரண்டு கோணங்களில் பார்க்க முடியும் என்பதைப் போல. 

எப்படிப் பார்த்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது

அதே சமயம் வேறு சில நினைவுகளும் என்னுள் நிழலாடுகிறது.....ஷேக்ஸ்பியர் மனைவி அவர் எழுதிக் கொண்டிருக்கும் போது மசியை அவர் தலையில் கொட்டுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் பாரதியின் செல்லம்மாவும் ஒருமுறை பாரதியின் பிரிவுக்குப் பின்னர் ஒரு வானொலி பேட்டியில் கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது

சில அறிஞர்கள் வாழ்க்கையில் சில சமயங்களில்....
என்ன செய்வது...

வியாழன், 30 மே, 2013

ஒரு மைக்ரோ கதை

நான் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அலுவலக நேரம். சாலைகளில் அதிக எண்ணிக்கை வாகனங்கள்.  பிரதான சாலையில் திரும்பும் போது என்னுடைய வண்டியை இன்னொருவன் உரசிவிட்டான். இருவருக்கும் அடிபடவில்லை. வண்டியிலும் கூட சேதம் இல்லைதான்.. சிறிய உரசல் தவிர. 

இதுதான் மேட்டர்..

அதை இரண்டுவிதமாக ’டீல்’ செய்வோம்...

முதல் வகை

”யேய்... பார்த்து வர மாட்ட...பெரிய ஏரோபிளேன்ல வர்றதா நினைப்பா...” நான்
”நீ பாத்து வா முதல்ல.. ராங்கல கட் பண்ணது யாரு.. நீயா நானா...” அவன்
”யேய்.. மரியாதயா பேசு... அப்பறம்....”நான்
”யேய்.. என்ன பெரிய இவனா நீ....”அவன்
”டேய்..பெரிய தாதாவா நீ...” வண்டிய விட்டு அவனை நெருங்க....
”என்னடா பெரிசா பேசற...”, அவனும் கித்தாய்ப்பாக முன்னேற...
நான் முன்னேற அவன் முன்னேற...
கிட்டத்தட்ட வடிவேல் கதை போல ”சண்டையில கிளியாத சட்ட உண்டா...”ரேஞ்சுக்கு செல்ல
களேபரம்.. பிறகு வேடிக்கை பார்த்த கூட்டம் கொஞ்ச நேரம்  எங்கள் சண்டையை enjoy செய்துவிட்டு போலீஸ் வந்ததும் பஞ்சாயத்து.. மறுபடியும் இரண்டு பேர் வண்டியையும்  காவல் நிலையம் எடுத்துச் சென்று.. அபராதம்... அறிவுறுத்தல்.. மிரட்டல் இத்யாதி. இத்யாதி...

இரண்டாம் வகை.

” சாரி.. சார்.. சட்டுனு வந்துட்டேன்..” நான்
”பரவாயில்ல..” அவர்
”எக்ஸ்ட்ரீம்லி சாரி எகெய்ன்...” புன்னகையுடன்
” இட்ஸ் ஓக்கே சார்..” அவரும் புன்னகையுடன் சென்றார்.

===
இதுதான் கதை..
நான் இப்போதெல்லாம் இரண்டாம் வகையைத்தான் விரும்புகிறேன்...
”எங்கும் சாந்தி நிலவவேண்டும்...”
===
பிகு
இந்த சம்பவம் என் நண்பர் ஒருவர் சொன்னார்... ஆனால் 1975 லில்   Abbas Kiarostami என்கிற ஈரானிய இயக்குனர் Two Solutions For One Problem என்கிற குறும் படத்தை இயக்கியுள்ளார்.. யூடியூப்பில் இருக்கிறது.. முடிந்தால் பாருங்கள் எத்தனை அழுத்தமான விசயத்தை நான்கு நிமிடத்தில் சொல்லியுள்ளார்..

சனி, 25 மே, 2013

நீரின்றி அமையாது உலகு…..

வள்ளுவன் இன்றிருந்தால் குறளை வேறு மாதிரிதான் பாடியிருப்பான்,,, அதாவது நன்நீரின்றி அமையாது உலகு என்று……
சமீபத்தில் ஏழுமலையான் தரிசனத்திற்குச் சென்றேன்…(குடும்பத்தினருக்காகதான் எல்லாம்)… இயன்ற வரை திருப்பதிக்கு வீட்டுத் தண்ணீர்தான் கொண்டு சென்றோம்.. இரண்டாவது நாள் தீர்ந்து விட்டது…  ஆந்திர வெயிலுக்கு கேட்க வேண்டுமா…?  கீழ் திருப்பதியில் ஒரு லிட்டர் தண்ணீர் ரூ 5க்கு விற்றுக் கொண்டிருந்தார் ஒரு கடைக்காரர்…  அட… என்று வாங்கிக் குடித்தேன்…  திருமலையிலும் அதேதான்….
அவ்வளவுதான்…
இரண்டு நாள்கள் படாத அவஸ்தை…
நீயா நானா கோபிநாத் கரடியாக கத்திக் கொண்டிருந்தார்… water borne disease  என்று… அதை பார்த்தபின்னரும் … சரி……
ஒரு வழியாக மருத்துவர் உதவியுடன்…. மீண்டும் இந்தப் ப்ளாக்கை சந்தோசமாக எழுதுகிறேன்….
ஆக அன்பார்ந்த மக்களே….
நன் நீரின்றி அமையக்கூடாது உலகு……


சனி, 18 மே, 2013

WHERE THERE IS LOVE.....

இந்த பரபரப்பான உலகில் எதுவும் இன்ஸ்டெண்ட்டாகச் சொன்னால்தான் எடுபடுகிறது... சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பாணி திருக்குறள் காலத்தயது என்றாலும்.. தோழர் பட்டாபிராமன் தன் மகனுக்கு அழைப்பிதழ் தந்தார்.  முகப்பில் இருந்த வாசகம் சட்டென்னு மனதை பற்றிக் கொண்டது.
அவை
”WHERE THERE IS A LOVE,  THERE IS LIFE...“

அய்யன் வள்ளுவன் வாக்கும் அதுதான் அன்பும் அறனும் என்று கூட ஒரு ”அற”த்தையும் சேர்க்கிறான்..

எத்தனை உண்மை பாருங்கள்....
உலகில் the GREATEST THINGS IN THE WORLD ARE THE SIMPLEST TRUTH
நிசர்தனம்தானே.....

வியாழன், 16 மே, 2013

தண்ணீர் பட்ட பாடு


தற்போதெல்லாம் தமிழ்ச் சினிமாவில் தண்ணி அடிப்பது என்னவோ உலகமகா விசயமாக காட்டுகிறார்கள்,, அதிலும் குறிப்பாக வெற்றி பெற்ற படங்களில் இதைப் போல நடக்கிறது….
ஒரு கல் ஒரு கண்ணாடியில் சந்தானம் அடிக்கடி  தண்ணி அடிப்பதைப் பற்றி லெக்சர் கொடுப்பார்,
எதிர்நீச்சல்  படத்தில் சிவகார்த்திகேயன் தன் நண்பரிடமிருந்து கூலிங் பீரை நைசாக எடுத்துக் கொள்வார்..
சூது கவ்வும் படத்தில் அடிக்கடி தண்ணி அடிப்பதை முக்கியமான காட்சிகளாக வரும்…
மக்கள் என்ன அத்தனை சந்தோசமாக இந்தக் காட்சிகளை ரசிக்கிறார்களா….? 

தேர்தலும் சிரிப்பும்


சமீபத்தில் கர்நாடகா தேர்தலில் பிஜேபி தோல்வி அடைந்து, காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.  அதன் காரணம் பற்றி பலர் பலவிதமாக வியக்யானம் செய்தாலும், புதிய தலைமுறை தொலைகாட்டிசியில் காலை நேரத்தில் பேசியவர் (பெயர் தெரியவில்லை)  சென்னை பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் மெலிதாகச் சிரித்துக் கொண்டே ஒரு வார்த்தை சொன்னார்.. “இது பிஜேபி காங்கிரசுக்கு தந்த ஒரு பரிசு“  என்றார், 
வெகு நேரம் சிரித்துக் கொண்டேயிருந்தேன்.. மேற்கொண்டு பேட்டியை பார்க்கவே முடியவில்லை.

ஞாயிறு, 12 மே, 2013

மகாநதியும் அங்காடித்தெருவும் போலவா அனைத்தும் நடக்கின்றன


தமிழ் திரைப்பட உலகில் முக்கியமான படைப்புகள் வருவது குறைவுதான்,  அவ்வப்பொழுது சில படங்கள் நிச்சயமாக முக்கிய படைப்புகள்தான் திகழ்கின்றன.  அதே சமயம் மக்கள் ஆதரவும் பெறும் படங்களாக ஆவது சில படைப்புகள்தான்.  இந்த இரண்டு குணாதிசயங்களுடன் வந்த படங்கள் வரிசையில் முக்கியமானவை
1)   மகாநதி
2)   அங்காடித் தெரு
இரண்டையும் சற்று காலதாமதமாக பரிசீலிக்கலாம்,  பட விமர்சனமா என்று சிலர் சிரிக்க வேண்டாம்.....
மகாநதி


1)முதலில் கிருஷ்ணசாமியின் மனைவி மண்டையைப் போடுகிறாள் (தாய் தந்தை மாமனார் முன்பு டிக்கெட் வாங்கியிருப்பார்கள்,, பரவாயில்லை)
2)   பிசினஸ் டெவலப்மெண்ட்க்காக (நியாயமான ஆசைதான்) .ஊரிலிருக்கும் வீடு நிலம் நீச்சுக்களை விற்றுவிடுகிறான்
3)   அவன் ஒரு ப்ராடிடம் (fraud)  மாட்டிக் கொள்கிறான்
4)   பிசினஸ் புட்டுக் கொள்கிறது
5)   மக்களால் அடித்து துவைக்கப் படுகிறான்
6)   சிறைக்கு சென்று விடுகிறான்
7)   வீடு பறிபோய்விடுகிறது
8)   பெண் கெடுக்கப்பட்டு விபசார விடுதியில் மாட்டிக் கொள்கிறாள்
9)   பையன் காணாமல் போகிறான்
10) மாமியார் வியாதிக்கு பணமில்லாமல் மவுத் ஆகிவிடுகிறாள்
11) சிறையில் தாக்கப் படுகிறான்
12) சிறைவாசம் நீட்டிக்கப் படுகிறது
13) மீண்டு வந்தால் ஏக பிரச்சனையில் மகள் மகனை மீட்கிறான்
14) மீண்டும் செய்யாத குற்றத்துக்காக தண்டனை
15) அதனால் கொலை செய்கிறான்
16) மீண்டும் சிறை
தொடர்ந்து ஒருவனுக்கு நிஜமாகவே இப்படி நடந்தால் அவன் எப்படி இருப்பான் என்றே நினைக்கவே பயமாக இருக்கிறது.. கமலுக்கு ஒரே படத்தில் அனைத்து அக்கிரமங்களையும் சொல்ல ஆசைப் பட்டு செய்திருக்கலாம்,

சரி…. அடுத்த படம்

அங்காடித் தெரு

அந்த தென்பாண்டி சீமையில் பிறந்த லிங்கத்துக்கு நடந்தது என்ன
1)   நன்றாகப் படிப்பான் ஆனால் வறுமை
2)   பிளஸ் டூ வில் அதிக  மதிப்பெண் வாங்கிய சமயம், அப்பா அவுட்… ஆக்சிடெண்ட்
3)   அந்த சமயம் வந்த அண்ணாச்சி கடை ஊழியர்களிடம் மாட்டிக் கொள்கிறான்
4)   அங்கே கடையில் அண்ணாச்சியால் கசக்கிப் பிழியப் படுகிறான்
5)   அவனின் காதலியின் கதை சுருக்கம் இதைவிட மோசம்
6)   சூபர்வைசரால் வதைக்கப்படுகிறான். அதே சூபர்வசைர் பலரை அப்படி வதைக்கிறான்
7)   காதலியின் தங்கை நாயைப் போல நடத்தப் படுவது
8)   காதலிப்பதால் வேலையை விட்டு விரட்டப்படுகிறான்
9)   போலிசில் வேறு பொய் கேஸ்
10) அதிலிருந்து வெளிவந்து இருவரும் தங்குவதற்கு வீடில்லாமல் ரோட்டில் படுத்து லாரியால் விபத்து
11) காதலியின் கால் அவுட்.
இந்த இரண்டு படங்கள் சொல்ல வந்த கதைகள் நிஜத்தின் பக்கமாக இருக்கிறதா… sweeping tragedy யாக சொல்லிக் கொண்டே சென்றால் அது நிஜமாகி விடும் என்று நினைத்திருக்கலாமா.....


அப்படி என்றால்......... நான் ஒரு கதை சொல்கிறேன்..
ஒரு மனிதன் நடந்து போகிறான்
1)   அவனுக்கு கால் சுளுக்கிக் கொள்கிறது
2)   தடுக்கி விழ்கிறான்
3)   அவனை நாய் பிறாண்டி விடுகிறது
4)   பக்கத்தில் ஒரு தேள் கடித்துவிடுகிறது
5)   அதே பக்கம் சென்ற பாம்பு……………………………….

இது சரியாக இருக்குமா…………………









புதன், 8 மே, 2013

சில நேரங்களில் சில கருத்துக்கள் உங்களுடன்
 விரைவில் உங்களுக்காக, உங்களுடன் பகிர
வருகிறேன்
பத்ரி